செய்திகள்
பெலாரஸ் போராட்டம்

பெலாரஸ்: அதிபர் பதவி விலகக்கோரி தொடரும் போராட்டம்

Published On 2020-09-13 17:40 GMT   |   Update On 2020-09-13 17:40 GMT
பெலாரஸ் நாட்டின் அதிபராக உள்ள லூகாஷென்கோ பதவி விலகக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்ஸ்க்:

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். 

அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்ஸ்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்ஸ்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி அண்டைநாடான லிதுவேனியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார்.

அதேபோல் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான வெரோனிகா டிசிப்கலோவும் தனது குடும்பத்துடன் போலாந்து தப்பிச்சென்றுவிட்டார். ஆனால் மரியா கொலிஸ்னிகோவா என்ற ஒருங்கிணைப்பாளர் மட்டும் பெலாரஸ் நாட்டிலேயே இருந்து கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தார். ஆனால், அவரை முகமூடி அணிந்த நபர்கள் கடத்திச்சென்று உக்ரைனுக்கு நாடுகடத்த முற்பட்டனர்.

ஆனால், தனது பாஸ்போர்ட்டை கிழித்த மரியா நாடுகடத்தல் நடவடிக்கையில் இருந்து தப்பித்தார். ஆனால், அவரை கைது செய்துள்ள பெலாரஸ் பாதுகாப்பு படையினர் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

இதையடுத்து, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மரியாவை விடுதலை செய்யக்கோரியும், அதிபர் அலெக்ஸ்சாண்டர் பதவி விலக்கக்கோரியும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் மின்ஸ்க் உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களில் இன்று திரண்ட ஏராளமான மக்கள் அதிபர் அலெக்ஸ்சாண்டர் பதவி விலக்கக்கோரி கோஷங்களை எழுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த போராட்டத்தை தடுக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற 250-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போராட்டம் மற்றும் அது சார்ந்த கைது நடவடிக்கைகளால் பெலாரசில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

Tags:    

Similar News