செய்திகள்
கீரனூர் அருகே கிராமங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு
கீரனூர் அருகே கிராமங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
கீரனூர்:
கீரனூர் அடுத்த புலியூர், செட்டிப்பட்டி, உறவிகாடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று வாட்ஸ்-அப் மூலம், அப்பகுதி இளைஞர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் நேற்று ஜல்லிக்கட்டுகாளைகளை சரக்கு வேன்களின் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
பின்னர் குளக்கரைகளில் காளைகளை அவிழ்த்து விட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் காளைகள் கொண்டு வந்தவர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சில்வர் குடம், அண்டா குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து கீரனூர், மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்புக்காக போலீசார் சென்று விட்டதால் உடனடியாக, அவர்களால் சம்பவ இடத்துக்கு வர முடியவில்லை.
எனினும், உள்ளூர் பணிகளில் ஈடுபட்டு இருந்த சில போலீசார் விரைந்து வந்து, ஜல்லிக்கட்டு நடத்தியவர்களை விரட்டினர். மேலும் ஜல்லிகட்டு காளைகளையும் திருப்பி அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடும் எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.