உள்ளூர் செய்திகள்
தண்ணீர் தொட்டியில் கொசுபுழுக்கள் : தனியார் அலுவலகத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
மாநகராட்சி வடக்கு மண்டலம் 42-வது வார்டு சின்னவேடம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்படும் தனியார் அலுவலக தண்ணீர் தொட்டியில் அதிக அளவில் கொசுப்புழுக்கள் இருந்தன.
கோவை:
கோவை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு களப்பணியாளர்கள் மூலம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீடுகள், நிறுவனங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை என்பதால் தேவையற்ற பிளாஸ்டிக் டப்பாக்கள், பூச்செடிகளில் தேங்கிய நீரை அப்புறப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மாநகராட்சி வடக்கு மண்டலம் 42-வது வார்டு சின்னவேடம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்படும் தனியார் அலுவலக தண்ணீர் தொட்டியில் அதிக அளவில் லார்வா கொசுப்புழுக்கள் இருந்தன. அங்கு ஆய்வு செய்து, அந்த அலுவலகத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.