செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியதில் ரூ. 20 கோடி பேரம்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2019-10-10 04:41 GMT   |   Update On 2019-10-10 04:41 GMT
நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. விட்டு கொடுத்ததில் ரூ. 20 கோடி கைமாறியுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
களக்காடு:

களக்காடு தெற்குகாடு வெட்டி கிராமத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. விட்டு கொடுத்ததில் ரூ. 20 கோடி கைமாறியுள்ளது. 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாகவும் இதில் 200 கோடி ரூபாய் தேர்தலில் செலவழிக்க போவதாகவும் கூறுகின்றனர். முன்பு இருந்த தேசிய காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை.

அ.தி.மு.க. வேட்பாளர் சாதாரண தொண்டர் மட்டுமே. அவர் பணத்தை நம்பி நிற்கவில்லை. இந்த தொகுதி வாக்காளர்களை நம்பி தேர்தலில் நிற்கின்றார். நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெளிமாவட்டத்தில் பிறந்து இந்த மாவட்டத்தில் நிற்கின்றார். தொகுதி விட்டு தொகுதி மாறி நிற்பது தலைவர்களுக்குதான் பொருந்தும். ராகுல்காந்தி, சோனியா காந்தி, அழகிரி போன்ற முன்னணி தலைவர்கள் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் உள்ளூரில் ஆள் கிடைக்காமல் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த தொகுதியில் நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வெற்றி பெற்றால் நாங்குநேரியில்தான் வசிப்பேன் என்று வசந்தகுமார் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் வெற்றிபெற்றவுடன் சென்னைக்கு சென்று விட்டார். உள்ளூரில் வசிக்கும் வேட்பாளரான எங்களது அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் வெற்றிபெற முடிவு செய்து விட்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை வாங்கியது தி.மு.க.தான். முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்தது மாதிரி உள்ளாட்சி தேர்தல் குறித்து தி.மு.க. பேசுவது வேடிக்கையாக உள்ளது. இன்று கோர்டில் அனைத்தும் சரி செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது. தேர்தலை கண்டு பயப்படுகிற கட்சி அ.தி.மு.க. கிடையாது.

நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும். நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டன. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வடக்கு பச்சையாறு நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மதத்தை சொல்லி இனத்தை சொல்லி இனி தி.மு.க.வால் ஓட்டுக்கேட்க முடியாது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News