செய்திகள்
கோப்புபடம்

குளித்தலை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-09-12 18:08 GMT   |   Update On 2021-09-12 18:08 GMT
குளித்தலை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அவர் கடன் பிரச்சினையால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள மேலகுட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 33), லாரி டிரைவர். இவருடைய மனைவி நதியா (33). இவர்களுக்கு சுஜித், பிரதீப் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கொரோனா காலமாக இருப்பதால் வடிவேலுக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. அதனால் அவர் விவசாயம் செய்து வந்துள்ளார்.

இதற்காக அவர் தனியார் வங்கியில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடனை சரிவர கட்ட முடியாததால் கடந்த சில நாட்களாக அவர் தனது உறவினர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் வடிவேல் மேலகுட்டப்பட்டி வாய்க்கால்மேடு பகுதியில் தள்ளாடியபடி நடந்து வந்துள்ளார். அதை பார்த்த அதே ஊரை சேர்ந்த கலைவாணன் என்பவர் கேட்டபோது தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருடைய உடல் மேலும் மோசமானதால் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வடிவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நதியா கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News