செய்திகள்
விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூக்கு கூடுதல் பொறுப்பு - ஆயுஷ்துறையும் ஒதுக்கீடு
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜுக்கு மத்திய ஆயுஷ்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை மந்திரியாக செயல்பட்டு வந்தர் ஸ்ரீபாத் நாயக். இவர் தனது மனைவி விஜயா நாயக் மற்றும் பாதுகாவளர்கள் சிலருடன் கடந்த 11-ம் தேதி கர்நாடக மாநிலம் எல்புரா பகுதியில் இருந்து கொஹர்னா என்ற பகுதிக்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, மந்திரி பயணம் செய்த கார் ஹசோஹமி என்ற கிராமம் அருகே சென்றபோது விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் மத்திய இணை மந்திரியின் மனைவி விஜயா நாயக் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், படுகாயங்களுடன் மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை தற்போது சீராக உள்ளது. ஆனாலும், விபத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளதால் மத்திய இணைமந்திரி ஸ்ரீபாத் நாயக் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், ஆயுஷ் அமைச்சரவை பணிகளை மந்திரி கவனிக்க முடியாத
சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூக்கு மத்திய ஆயுஷ்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்து ஒய்வு எடுத்துவரும் ஸ்ரீபாத் நாயக் உடல்நலம் பூரணமாக குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை விளையாட்டுத்துறை மந்திரி ரிஜிஜூ ஆயுஷ்துறையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.