உள்ளூர் செய்திகள்
என்.ஆர்.காங்.-பா.ஜனதா ஆட்சியில் வேதனைகளே அதிகம் வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா ஓராண்டு ஆட்சியில் வேதனைகளே அதிகம் என்று வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு ஆகிறது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என்று அறிவித்தார். ஓராண்டு நிறைவடைந்தும் எதிலும் புதுவை பெஸ்ட்டாக மாறவில்லை.
மத்திய பா.ஜனதா அரசு, காங்கிரஸ் ஆட்சி ஒதுக்கிய நிதியைவிட குறைவாகவே ஒதுக்கியுள்ளது. புதுவையில் 10 ஆயிரம் அரசுக் காலிப்பணியிடங்கள் உள்ளது. ஆனால் அதை நிரப்புவதற்கான நிதி மாநில அரசிடம் இல்லை.
இந்த ஆட்சியில் ஓராண்டாக எந்த மாற்றமும் இல்லை. இந்த அரசில் சாதனைகள் இல்லை, வேதனைகள்தான் அதிகம் உள்ளது.
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். மத்திய உள்துறை மந்திரிஅமித்ஷா புதுவைக்கு வந்த பின் தலைமை செயலர் மாற்றத்தைத்தவிர எந்த மாற்றமும் நடைபெறவில்லை.
புதுவைக்கு தேவை நிதியும், நிதி அதிகாரமும் தான். அதனை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பா.ஜனதா நியமித்துள்ள கவர்னர்கள் பிரச்சினைகளை உருவாக்குபவர்களாக உள்ளனர்.
புதுவை அரசுக்கு பொருளாதாரம் உள்பட ஆலோசனைகளை வழங்க நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டனர். தற்போதைய
எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் நல்ல கல்வி கற்றுள்ளனர். எனவே தனியாக அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக நியமன எம்.எல்.ஏ.க்கள் தேவையில்லை.
நியமன எம்.எல்.ஏ.க்களை கொண்டுதான் கடந்த ஆட்சியில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியை கவிழ்த்தது. எனவே தற்போது புதுவை அரசியல் சட்டத்தில் இருந்து நியமன எம்.எல்.ஏ.க்களை நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.