செய்திகள்
கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்து வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி

Published On 2020-12-03 19:21 GMT   |   Update On 2020-12-04 17:33 GMT
இங்கிலாந்து நாட்டில் பைசர் மற்றும் பயான்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தற்போது வந்து சேர்ந்துள்ளது.
லண்டன்:

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

உலக அளவில் கொரோனா வைரசால் 6.50 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 4.50 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட முதல் 5 இடங்களில் உள்ளன.

இங்கிலாந்தில் 16.50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இங்கிலாந்து 7-வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, பைசர்-பயான்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு இங்கிலாந்து அரசு சமீபத்தில் அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்நிலையில், பைசர் மற்றும் பயான்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தற்போது இங்கிலாந்தில் வந்து சேர்ந்துள்ளது. இந்த மருந்து விரைவில் நாடு முழுவதும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. தன்னார்வலர்களிடம் நடத்திய பரிசோதனையில் இவை 95 சதவீதம் வெற்றி அளித்துள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், தடுப்பூசியை விநியோகிப்பதில் மகத்தான தளவாட சவால்கள் இருக்கும். அனைத்து மக்களையும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சில மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதுவரை 40 மில்லியன் டோஸ் ஆர்டருக்கு உத்தரவிட்டுள்ளது, 

முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு, கொரோனாவால் மருத்துவமனைக்கு வருபவர்களும், மரண எண்ணிக்கையும் பெருமளவு குறையும் என இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.


இங்கிலாந்து  மண்ணில் தற்போது கொரோனா தடுப்பூசி வந்து சேர்ந்துள்ள நிலையில், அதை விரைவாகவும், அதிக அளவிலும் விநியோகம் செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான பணி துவங்கப்பட உள்ளது என்றார்.


முதற்கட்டமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார மற்றும் முதியோர் காப்பக ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

பைசர் மற்றும் பயான்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி 10 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News