செய்திகள்
சுவாதி மாலிவால் தலைமையில் போராட்டம்

கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் உண்ணாவிரதம்

Published On 2019-12-03 09:50 GMT   |   Update On 2019-12-03 09:50 GMT
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
புதுடெல்லி:

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் தாசில்தார் ஒருவர் தனது அலுவலகத்திலேயே கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டார். 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே, கடந்த மாதம் 27ம் தேதி இரவு பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

அதே போல் ராஜஸ்தானில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தால் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 

இந்நிலையில், பெண்களுக்கெதிரான இம்மாதிரியான பாலியல் குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 



‘பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்கப்பட வேண்டும். ஹைதராபாத் பிரியங்கா ரெட்டி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். கடந்த ஆண்டும் இது போன்ற சம்வங்களுக்காக நான் போராட்டத்தில் ஈடுபட்டேன். 

அதன் பின்னர் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் மரணதண்டனை விதிக்கப்படும் என அரசாங்கம்  சட்டத்தை உருவாக்கியது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பிரதமர் மோடி இப்போது அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான மற்றும் விரைவாக தண்டனை கிடைக்க வேண்டும்’ என மாலிவால் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த பாலியல் சம்பவங்களை குறிப்பிட்டு, பிரதமர் மோடிக்கு சுவாதி மாலிவால் கடிதம் எழுதி உள்ளார். அதில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதுடன், தீர்ப்பு வழங்கப்பட்ட 6 மாதங்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News