செய்திகள்
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மூலம் ரெயில் பயணிகளுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மூலம் ரெயில் பயணிகளுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஓடும் ரெயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பயணிகளுக்கும் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் குறித்து மேளதாளத்துடன் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் விழிப்புணர்வு மற்றும் பேரணி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது ரெயில் பயணிகள் அனைவரும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முன்பதிவு கவுண்ட்டரில் முன்பதிவு செய்ய ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு நிற்காமல் சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், அரசு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மற்றும் சென்னை பகுதியை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை கமாண்டர் பி.செந்தில்ராஜ் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் பலர் கலந்து கொண்டனர்.