செய்திகள்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்

திங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது

Published On 2019-11-15 06:15 GMT   |   Update On 2019-11-15 06:15 GMT
வங்கக்கடலில் வருகிற 18-ந்தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி தென்படுவதால் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் சற்று அதிகமாக மழை பெய்துள்ளது.

வங்கக்கடல், அரபிக்கடலில் உருவான காற்றழுத்த காரணமாக மழை பெய்த நிலையில் அது புயலாக மாறி தமிழகத்தை விட்டு விலகி சென்றதால் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்து வறண்ட வானிலை காணப்பட்டது.

காற்றின் ஈரப்பதத்தை புயல் ஈர்த்து சென்றதால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத்தொடங்கியது. கடல் காற்றின் வேகம் குறைந்தது. இதன்காரணமாக உருவான வெப்ப சலனத்தால் சென்னையில் மீண்டும் மழை பெய்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்றிரவு ஆங்காங்கே மழை பெய்துள்ளது. இன்று அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.

எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், கிண்டி, வேளச்சேரி, தாம்பரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, மணலி, திருவொற்றியூர் உள்பட பல இடங்களில் மழை பெய்தது. இன்றும் பெய்யும் சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், வெப்ப சலனம் காரணமாக சென்னைக்கு மழை கிடைத்துள்ளது. இன்றும் நாளையும் ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்பு உண்டு.

மேலடுக்கு சுழற்சி எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லாததால் கனமழைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

வங்கக்கடலில் வருகிற 18-ந்தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி தென்படுகிறது. இது கடலோரம் வரை பரவி வரும் போது மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உருவாகும். எனவே 18,19 தேதிகளில் பரவலாக மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News