உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பெற்றோர் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2022-04-16 04:03 GMT   |   Update On 2022-04-16 04:03 GMT
ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அருகே பெற்றோர் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அருகே உள்ள பூசாரியூர் வள்ளுவர் தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு கீதா (17) என்ற மகளும், விஷ்வா (14) என்ற மகனும் உள்ளனர்.

கீதா வெள்ளிதிருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். விஷ்வா 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவி கீதா பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். பெற்றோர் பள்ளிக்கு செல்ல கூறியதற்கு செல்போன் வாங்கி தந்தால்தான் பள்ளிக்கு செல்வேன் என்று மாணவி கீதா கூறினார்.

இதையடுத்து ஜெயபிரகாஷ் தனது மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இதையடுத்து கீதா 2 நாட்கள் மட்டும் பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதையடுத்து பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு பல முறை கீதாவை கண்டித்தனர். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

சம்பவத்தன்று ஜெயபிரகாஷ் தனது மனைவியுடன் தோட்டத்துக்கு புறப்பட்டார். அப்போது தனது மகளை இன்று பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று கூறி விட்டு சென்றார். மீண்டும் அவர் தனது மனைவியுடன் இரவு 7 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வீட்டில் இருந்த கட்டிலில் மாணவி கீதா மயக்க நிலையில் படுத்து கிடந்தார். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது தான் வீட்டில் இருந்த களை கொல்லி (வி‌ஷம்) மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கீதாவை மீட்டு அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கீதா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் தொடர்ந்து கீதாவுக்கு இருமல் வந்து கொண்டே இருந்தது. இதையடுத்து அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென இறந்து விட்டார்.

இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News