தொழில்நுட்பம்
குவால்காம் பிராசஸர்களில் அபாயகரமான பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிப்பு
குவால்காம் நிறுவன பிராசஸர்களில் அபாயகரமான பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
உலகில் நாளுக்கு நாள் மொபைல் சாதனங்களுக்கான தேவை அதிகரித்து கொண்டு வரும் நிலையில், சைபர்செக்யூரிட்டி பிரச்சினை பொதுவான ஒன்றாக மாறிவருகிறது. தற்சமயம் குவால்காம் சிப்செட்களில் அபாயகரமான பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக செக்பாயிண்ட் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.
புதிய பாதுகாப்பு குறைபாட்டை குவால்காம் ஆச்சிலீஸ் என அழைக்கிறது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகில் விற்பனையாகும் மொபைல் போன்களின் 40 சதவீத மாடல்களில் குவால்காம் பிராசஸர் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. அந்த வகையில் இந்த பாதுகாப்பு குறைபாடு உலகம் முழுக்க மொபைல் சாதனங்களை பயன்படுத்துவோரில் 40 சதவீத பேரை பாதித்து இருக்கலாம்.
இந்த குறைபாடு காரணமாக மொபைல் சாதனங்களில் தீங்கு விளைவிக்கும் செயலிகள் இன்ஸ்டால் செய்யப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குவால்காம் சிப்களில் உள்ள 400 வரி கோட்களை யார் கண்டறிந்தாலும், ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
இந்த கோட்களை இயக்கும் உரிமை கொண்டவர்களால், அழைப்புகளை பதிவு செய்ய முடியும். மேலும் ஸ்மார்ட்போன்களில் இருந்து விவரங்களை திருடவும், செயலிகளை இன்ஸ்டால் செய்யவும், சாதனத்தை நிரந்திரமாக பிளாக் செய்யவும் முடியும். இந்த குறைபாடு பற்றிய விவரங்கள் ஏற்கனவே குவால்காம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டது.
அந்த வகையில் இதனை சரி செய்யும் பணிகளில் குவால்காம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விரைவில் இதனை சரி செய்வதற்கான அப்டேட்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.