ஆன்மிகம்
வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய காட்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்ச தீபம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2021-11-20 06:13 GMT   |   Update On 2021-11-20 06:13 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை திருவிழாவில் தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடை. வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் கார்த்திகை திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

விழா நாட்களில் காலை-மாலையில் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்கள்.

பெரியகார்த்திகையான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணிக்கு பொற்றாமரைகுளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. மீனாட்சி, சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

பின்னர் அவர்கள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளினார்கள். அங்கு இரவு 7 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது., தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை 6 மணிக்கு கோவிலில் தீபம் ஏற்பட்டது. பின்னர் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடந்து. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News