தமிழகத்தில் கருத்து கணிப்புகள் பொய்த்து போகும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை:
மதுரை அரசு தலைமை மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் 2-ம் கட்ட தடுப்பூசியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செலுத்தி கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசியை எடுத்து கொள்கிறார்கள். தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள். மருத்துவர்கள், காவல்துறை உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் மகத்தான சேவையை ஆற்றி வருகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. கொரோனா தொற்றை கண்டறிய அதிக அளவில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே மிகப்பெரிய ஆயுதம்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியால் மட்டுமே முடியும். ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.
கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் வெற்றி பெற்றதில்லை. கடந்த 2016-ல் கருத்து கணிப்பு பொய்யாகி உள்ளது. கருத்துக் கணிப்பை வைத்து தி.மு.க.வினர் 2 நாட்களுக்கு மகிழ்ச்சி அடையலாம். இந்த கருத்துக் கணிப்புகளும் பொய்த்து போகும்.
அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெறும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு செய்த சேவைக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். மக்களின் வாக்குகள் மட்டுமே வெற்றியை தரும். அ.தி.மு.க. சாமானியர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.