செய்திகள்
கோப்புபடம்

வெண்ணந்தூர் அருகே விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2020-11-20 09:56 GMT   |   Update On 2020-11-20 09:56 GMT
வெண்ணந்தூர் அருகே கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே மதியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடேசன். இவருடைய மகன் தனசேகரன் (வயது 29). என்ஜினீயரிங் முடித்து விட்டு விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக பூச்சி மருந்தை குடித்து பின்னர் உயிர் பிழைத்தார். 

இந்தநிலையில் தனசேகரன் சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டும், உடல்நிலை சரியில்லாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர் பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் செல்வராஜ் என்பவரது கிணற்றுக்கு அருகே தனசேகரன் பயன்படுத்திய சால்வை இருந்தது. 

சந்தேகத்தின் பேரில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் மின்மோட்டார் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தனசேகரனை பிணமாக மீட்டனர். 

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வெண்ணந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News