செய்திகள்
ஆடுகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விலை அதிகரிப்பு

Published On 2021-07-17 10:07 GMT   |   Update On 2021-07-17 10:07 GMT
கடந்தாண்டு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆட்டு இறைச்சி தற்போது 700 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொம்பூதி, பிரப்பன் வலசை, தேர்போகி, பூமாலை வலசை, செல்வநாயகபுரம், காமாட்சிபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல தலைமுறைகளாக ஆடு வளர்ப்பதை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் பாதுகாப்புடன் இருப்பதால் சந்தையில் நல்ல விலை கிடைத்து வருகிறது.

வருகிற 21-ந் தேதி பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆடுகளை அறுத்து குர்பானி கொடுப்பது வழக்கம்.

மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள் குர்பானி கொடுக்கப்படுவதால் தேவைகள் அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆட்டு இறைச்சி தற்போது 700 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதே போல் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குர்பானி ஆடு தற்போது ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கிடுகிடு விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இருப்பினும் விலையைப் பற்றி கவலைப்படாமல் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர், விடுமுறை நாட்களில் சாதாரணமாக ஆட்டு இறைச்சி பயன்படுத்தி வந்த மக்கள் விண்ணைத்தொடும் விலை உயர்வால் முக்கிய பண்டிகை நாட்களில் மட்டும் ஆட்டு இறைச்சி வாங்கி வருகின்றனர்.

ஆடுகளின் விலை உயர்வு காரணமாக ஏராளமானோர் கிராமப் பகுதிகளில் வீடுகளில் ஆடுகள் வளர்க்க தொடங்கியுள்ளனர். இதனால் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.


Tags:    

Similar News