செய்திகள்
ஜெகதீசன்

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: ஜெகதீசன் அபாரம்- திருச்சிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக்

Published On 2021-08-15 15:50 GMT   |   Update On 2021-08-15 15:50 GMT
ஜெகதீசன் அபாரமாக விளையாடி 90 ரன்கள் விளாச திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கவுசிக் காந்தி, என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் பவர்பிளேயில் சிறப்பாக விளையாடினர். ஆனால் பவர்பிளேயின் கடைசி பந்தில் கவுசிக் காந்தி 19 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது சேப்பாக் 58 ரன்கள் எடுத்திருந்தது.

ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஜெகதீசன் அபாரமாக விளையாடினார். ஜெகதீசன் 37 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். சேப்பாக் அணி 12.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ராதாகிருஷ்ணன் (3), சசிதேவ் (12), ஆர். சதீஷ் (11) என விரைவாக ஆட்டமிழந்தார்.

ஜெகதீசன் 58 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 17.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்திருந்தது. 

18-வது ஓவரில் 16 ரன்களும், 19-வது ஓவரில் 17 ரன்களும் சேப்பாக் அணிக்கு கிடைத்தது. இதனால் ஸ்கோர் 170 ரன்னைத் தாண்டியது. கடைசி ஓவரில் 10 ரன்கள் கிடைக்க மொத்தம் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News