செய்திகள்
பழைய பஸ் நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

ராமநாதபுரத்தில் தொடர் மழையால் குளம் போல மாறிய பஸ் நிலையம்

Published On 2020-11-16 14:28 GMT   |   Update On 2020-11-16 14:28 GMT
ராமநாதபுரத்தில் பெய்த தொடர் மழையால் குளம் போல பஸ் நிலையம் மாறி விட்டது. பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ராமேசுவரம்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. அதுபோல் நேற்று பகலிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் மழை பெய்தது. பாம்பன் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசியதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது.

ராமேசுவரத்தில் பெய்த பலத்த மழையால் ராம தீர்த்தம் சாலை, தனுஷ்கோடி செல்லும் சாலை உள்ளிட்ட நகரின் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ராமேசுவரத்தில் 28.2 மில்லி மீட்டர் மழையும், பாம்பனில் 12 மில்லி மீட்டர் மழையும், தங்கச்சிமடத்தில் 15 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

ராமநாதபுரத்தில் தீபாவளிக்கு முன்தினம் பெய்த மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தீபாவளி அன்றும், நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. இதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வராமல் மெயின் ரோட்டில் நின்று சென்றது. பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி நின்றதால் பயணிகள் பஸ் நிலையத்திற்கு வெளியே நின்று பஸ்களில் ஏறி சென்றனர். பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்திற்கு வெளியே நின்றதால் அதில் ஏறுவதற்கு பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
Tags:    

Similar News