செய்திகள்
தமிழக அரசு

ஜனவரி 1-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் வழக்கம்போல் இயங்கும் - தமிழக அரசு

Published On 2020-10-24 19:29 GMT   |   Update On 2020-10-24 19:29 GMT
ஜனவரி 1-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

ஜனவரி 1-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள், அதாவது சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கடந்த மே 15-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ஒவ்வொரு அலுவலகத்திலும் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று ஆணையிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து ஒவ்வொரு அலுவலகமும் 100 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்டு 31-ந் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்களும் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அரசு மாற்றியுள்ளது.

அதன்படி, ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி, 100 சதவீத பணியாளர்களுடன் 5 வேலை நாட்கள் தற்போதுள்ள நேர அளவின்படி அரசு அலுவலகங்கள் இயங்கும். இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 1-ந் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News