செய்திகள்
மோசடி

கம்பெனி ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி ரூ.15 கோடி மோசடி- 13 பேர் மீது வழக்கு

Published On 2021-02-23 14:34 GMT   |   Update On 2021-02-23 14:34 GMT
திருமங்கலம் அருகே கம்பெனி ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி ரூ.15 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம்:

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் டெடி குரூப் ஆப் கம்பெனி மற்றும் மேல்நிலைப்பள்ளி நடத்தி வருபவர் பிரான்சிஸ் அமந்தா மர்பி. லண்டனை சேர்ந்த இவர் திருமங்கலம் தாலுகா போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு எனது குழந்தைகளின் படிப்புக்காக நான் லண்டன் சென்றேன். அப்போது கம்பெனி மற்றும் பள்ளி நிர்வாகத்தை பார்த்துக் கொள்ளும்படி திருமங்கலத்தைச் சேர்ந்த கவாஸ்கர் என்பவரிடம் ஒப்படைத்து சென்றேன். ஆனால் அவர் கம்பெனி ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி தெரியவந்ததும் 2019-ம் ஆண்டு கம்பெனி நிர்வாகங்களை ஆய்வு செய்தபோது, ரூ.15 கோடி அளவிற்கு கவாஸ்கர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவருக்கு உதவியாக ஆடிட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், கணக்காளர் உள்பட பலர் செயல்பட்டுள்ளனர்.

இதுபற்றி கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். புகார் தொடர்பாக கவாஸ்கர், அவரது தந்தை நாக ராஜன், சகோதரர் ரோகன், பிரியதர்ஷினி, லயோலா, பாஸ்கரன், ஆனந்தி, விஜயா, ஜெகநாதன், அரசி, பரிமளம், சேகர், கருப்பையா மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் கவாஸ்கர், ரோகன், பாஸ்கரன், ஜெகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News