உள்ளூர் செய்திகள்
கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
கோவை அருகே நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை 2 வாலிபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கோவை:
கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 51). இவர் நேற்று தனது பக்கத்து வீட்டை சேர்ந்த மீனாட்சி என்பவரை அழைத்து கொண்டு மகள் வீட்டு நடந்து சென்றார்.
அப்போது புதுபாளையம் அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென தமிழ்செல்வியின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வி மற்றும் மீனாட்சி சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து தமிழ்செல்வி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.