உள்ளூர் செய்திகள்
தொடர் விடுமுறையையொட்டி தென் மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தென் மாவட்ட ரெயில்களில் தொடர் விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
செங்கோட்டை:
விடுமுறை காலத்தில் ரெயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக தென்னக ரெயில்வே சார்பில் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி பல்வேறு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி நாளை மறுநாள் முதல் 20 -ந்தேதி வரை ராமேஸ்வரம் -சென்னை எழும்பூர் விரைவு ரெயிலில் (22662) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், நாளை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் விரைவு ரெயிலிலும் (22657), நாளை மறுநாள் மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரெயிலிலும் (22658) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
வருகிற 20-ந்தேதி வரை சென்னை - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரெயில் (16723), சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரெயில் (22661), சென்னை - குருவாயூர் விரைவு ரெயில் ஆகியவற்றில் (16127) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
மேலும் வருகிற 21-ந்தேதி வரை திருவனந்தபுரம் - சென்னை இடையே செல்லும் அனந்தபுரி விரைவு ரெயில் (16724), மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரெயில் (16344), குருவாயூர் - சென்னை விரைவு ரெயில் (16128) ஆகியவற்றிலும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று இணைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.