செய்திகள்
தற்கொலை

காதலித்து திருமணம் செய்த 4 மாதத்தில் விபரீதம்- தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-06-11 03:35 GMT   |   Update On 2021-06-11 03:35 GMT
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி 4 மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் மணி (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். அதே சூளையில் நவமால்மருதூரை சேர்ந்த சவிதா (25) என்பவரும் வேலை செய்து வந்தார்.

அப்போது மணிக்கும், சவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே காதலாக மலர்ந்தது. பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

40 நாட்கள் கருவுற்றிருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சவிதாவுக்கு கரு கலைந்துவிட்டது. இதனால் கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இருவரும் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டு வந்தனர்.

மேலும் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணியும், சவிதாவும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உள்ள மின்விசிறியில் ஒரே கயிற்றில் மணியும், அவரது மனைவி சவிதாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே நேற்று காலை மணி, வேலைக்கு வராததால் அவரை தேடி செங்கல் சூளை ஊழியர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கணவன்- மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இதுபற்றி அவர்கள், கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணி, சவிதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்த 4 மாதத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News