உள்ளூர் செய்திகள்
வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
அரக்கோணம், நெமிலி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தினர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த கூட்டத்தில் அரக்கோனம், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி உள்ளிட்ட டவுன் பஞ்களில் ஜனவரி மாத இறுதிக்குள் கட்டாயம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் காவேரிப்பாக்கம் டவுன் பஞ்., சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்., அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் டவுன் பஞ்., ஊழியர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை கையோடு அழைத்து வந்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்தனர்.
ராமசாமி தெரு, இருளர் காலனி, தோட்டக்காரன் தெரு, பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வட்டார மருத்துவ அதிகாரி டேவிஸ் பிரவீன் ராஜ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், செயல் அலுவலர் மனோகரன் உள்ளிட்டோர் தலைமையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் பெயர்களை வைத்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பட்டியல் தயார் செய்யப்பட்டது.
வீட்டில் இல்லாத நபர்களை அவர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.