தொழில்நுட்பம்
இந்தியாவில் 5ஜி வழங்கும் பணிகளை துவங்கிய சீன நிறுவனம்
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. #Oppo
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் அமைந்திருக்கும் தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தில் சர்வதேச சந்தை மற்றும் இந்தியாவுக்கான 5ஜி மொபைல் போன் உபகரணங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
வியாபாரத்திற்கு ஏற்ப தற்சமயம் இருப்பதை விட இருமடங்கு புதிய ஊழியர்களை அடுத்த மூன்றாண்டுகளில் பணியமர்த்த ஒப்போ திட்டமிட்டுள்ளதாக ஒப்போ மொபைல் இந்தியா துணை தலைவர் மற்றும் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் தலைவர் தஸ்லீம் ஆரிஃப் தெரிவித்தார்.
இந்திய சந்தை வளர்ந்து வருகிறது. இந்திய சந்தையில் அதிக கவனம் செலுத்துகிறோம். இந்திய நுகர்வோருக்கென பிரத்யேக புதுமைகளை அறிமுகம் செய்யவே இந்தியாவின் ஐதராபாத் நகரில் சொந்தமாக ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை துவங்கி இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் மூலம் பல்வேறு புதுவித தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகம் செய்ய முடியும். இத்துடன் இவை இந்திய நுகர்வோரின் பிரச்சனைகளை சரிசெய்யும் விதமாகவும் இருக்கும் என அவர் ஆரிஃப் தெரிவித்தார். இந்திய சந்தைக்கான சாதனங்கள் மட்டுமின்றி சர்வதேச சந்தைக்கு தேவையான 5ஜி சார்ந்த அம்சங்களுக்கான பணிகளும் ஐதராபாத் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தில் நடைபெறுகிறது.
இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சரி செய்யும் நோக்கில் அதிகளவு பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். மேலும் எங்களது நிறுவனம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொருந்தும் வகையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் ஒப்போ நிறுவனம் ஸ்டார்ட்-அப் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.