ஆன்மிகம்
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டி

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மக்காச்சோளம் வைத்து பூஜை

Published On 2021-01-13 04:15 GMT   |   Update On 2021-01-13 04:15 GMT
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மக்காச்சோளம் வைத்து பூஜை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த கோவிலில் உள்ளது. அதுதான் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஆகும்.

சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறுவார். பின்னர் கோவில் சிவாச்சாரியார்கள் சுவாமியிடம் பூபோட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அது நேர்மறையாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொங்கூர் பகுதியை சேர்ந்த கே.எம்.சிவராம் என்ற பக்தரின் கனவில் முருகன் தோன்றி உத்தரவு பெட்டியில் மக்காச்சோளம் வைத்து பூஜை செய்யுமாறு உத்தரவிட்டதாக, அந்த பக்தர் கோவிலுக்கு வந்து நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து சாமியிடம் உத்தரவு பெற்று உத்தரவு பெட்டியில் நிறைநாழியில் மக்காச்சோளம் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதனால் மக்காச்சோளம் விளைச்சல் அதிகரிக்கும். அதேசமயத்தில் விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், விவசாயிகளுக்கு நிறைவானதாக இருக்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் நிறைநாழி படி அரிசி வைத்து பூஜை செய்யப்பட்டது.
Tags:    

Similar News