தோஷ பரிகாரங்கள்
கால சர்ப்ப தோ‌ஷம்

கால சர்ப்ப தோ‌ஷம் ஏன் ஏற்படுகிறது?

Published On 2022-03-22 04:15 GMT   |   Update On 2022-03-22 07:44 GMT
கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்படுகிறது.
உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷ பாதிப்பு உள்ளது. இதில் பலர் சர்ப்பத்தை(பாம்பு) நேரில் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். பின் எவ்வாறு சர்ப்ப தோ‌ஷம் ஏற்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். இவைகள் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்படுகிறது.

காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது, நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது, கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது, பொய்யான வதந்தியை பரப்புவது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது, கோவில் சொத்தை அபகரிப்பது பசுக்களை, விலங்குகளை வதைப்பது இயற்கையை மாசுபடுத்துவது நோயை பரப்புவது, வீண் வதந்தியை கிளப்புவது போன்ற காரணங்களால் தான் சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்படுகிறது.

ராகு மற்றும் கேது என்பது முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.

இதை அறிவியல் ரீதியாக கூறினால் மனிதர்களின் மரபணுவில் உள்ள 46 குரோமோசோம்கள் ராகு- கேதுக்களின் கலவைகளாகும். குரோமோசோம்கள் என்பவை ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரை வியாதி போன்ற அனைத்து குணங்களும் பதிவாகி இருக்கும். 23 குரோமோசோம்கள் தந்தை வழியை குறிப்பவை (ராகு) மற்றும் 23 குரோமோசோம்கள் தாய் வழியை குறிப்பவை (கேது). முன்னோர்கள் செய்த பாவங்களை ராகு-கேதுக்கள் என்ற பாம்புகளின் பிடியில் சிக்கி 33 ஆண்டுகள் அனுபவித்து பல அனுபவங்கள் பெற்று தோ‌ஷ நிவர்த்தி பெறுவதாகும்.
Tags:    

Similar News