கபிஸ்தலம் அருகே கரும்பு வயலில் தீவிபத்து- ரூ.20 லட்சம் சேதம்
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே வட சருக்கை கிராமத்தில் மெயின் ரோட்டில் கரும்பு விவசாயம் செய்து இருப்பவர்கள் அதே பகுதியில் வசிக்கும் துரைசாமி, மோகன்தாஸ் ,சாமிநாதன், ராஜாங்கம் ,மாணிக்கம் ,மணிமேகலை ,முருகானந்தம், தையல்நாயகி, கோவிந்தசாமி.
இவர்களுக்கு சொந்தமான சுமார் 50 -க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிர் செய்திருந்தனர்.
சம்பவத்தன்று அந்த கரும்பு பயிரின் மேல் பகுதியில் சென்ற மின் கம்பியில் உராய்வு ஏற்பட்டு அதில் ஏற்பட்ட நெருப்பால் கரும்பு வயலில் தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் ரூபாய் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து நாசம் ஆனது.
இதுபற்றிதகவலறிந்த பாபநாசம் தாசில்தார் பொறுப்பு சீமான், வருவாய் ஆய்வாளர் வினோதினி, தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அய்யா ராசு, ஒன்றியக் குழு தலைவர் சுமதி, ஒன்றிய குழு உறுப்பினர் சரவண பாபா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.