செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - தி.மு.க. வலியுறுத்தல்
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
ஆலங்குளம்:
ஆலங்குளம், ஏ.லட்சுமியாபுரம். கீழாண்மறைநாடு, அப்பயநாயக்கர் பட்டி, நதிகுடி, குண்டாயிருப்பு. எதிர்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் இந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி, உளுந்து போன்ற பயிர்கள் பாதி்க்கப்பட்டுள்ளன.
அதேபோல வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சூரியகாந்தி, சோளம், கம்பு மற்றும் மிளகாய்பயிர்கள் தொடர்மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் எதிர்கோட்டை ஜெயபாண்டியன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆலங்குளம், வெம்பக்கோட்டை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சூரியகாந்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.