செய்திகள்
விவசாயிகள் - போலீசார் மோதல்

தொடரும் விவசாயிகள் போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த மத்திய மந்திரி

Published On 2020-11-28 10:23 GMT   |   Update On 2020-11-28 10:23 GMT
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை டெல்லி எல்லையில் அரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தடையை மீறி டெல்லியை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். 

அதன்பின்னர் நிலைமை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, டிராக்டர்களிலும், லாரிகளிலும், நடைபயணமாகவும் விவசாயிகள் டெல்லி நோக்கிய தங்கள் பயணத்தை தொடங்கினர்.

விவசாயிகள் டெல்லியில் உள்ள நிரங்கரி சமஹம் மைதானத்தில் அமைதியான முறையில் தங்கள் போராட்டத்தில் ஈடுபட போலீசார் அனுமதி அளித்தனர். 

இதனால், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். மேலும், டெல்லி மைதானத்தில் விவசாயிகள் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய மந்திரி கூறியதாவது:-

விவசாய சங்கங்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பது தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்புகிறேன். 

விவசாயிகளின் பெயரில் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினர் அரசியலில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

என்றார்.
Tags:    

Similar News