செய்திகள்
கொலை

எரியோடு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி குத்திக்கொலை

Published On 2020-11-15 05:15 GMT   |   Update On 2020-11-15 05:15 GMT
எரியோடு அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவருடைய உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வடமதுரை:

எரியோடு அருகே உள்ள எலப்பார்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 35). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (25). இவர்கள் இருவரும் உறவினர்கள். 2 பேரும் சேர்ந்து அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் கருப்பசாமிக்கும், காமாட்சிக்கும் இடையே வழக்கம் போல் மது போதையில் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த காமாட்சி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்பசாமியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதில் படுகாயமடைந்த கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், வடமதுரை இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதையில் நடந்த தகராறில் அவருடைய உறவினரே கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

பின்னர் கருப்பசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள காமாட்சியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News