போலீசார் வாகன சோதனையின் போது குடிபோதையில் தகராறு- வாலிபர் கைது
நாகப்பட்டினம்:
நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து பொதுமக்கள் அநாவசியமாக வெளியே சுற்றுவதை தடுக்க பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்பு அரண்கள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் கவிவர்மன் உள்ளிட்ட போலீசார் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மாஸ்க் அணியாமல் வந்த நபரை நிறுத்தி ஏன் மாஸ்க் அணியவில்லை என போலீசார் கேட்டனர். அப்போது குடிபோதையில் இருந்த அந்த நபர் மருத்துவமனைக்கு அவசரமாக தான் செல்வதாகவும் தனது உறவினருக்கு உடல்நிலை சரி இல்லை என்றும் பொய் காரணம் கூறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.
இதையடுத்து அவரின் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் நாகூர் அலகுகாரன் தோட்டத்தைச் சேர்ந்த செல்லமுத்து (வயது 31) என தெரியவந்தது. அப்போது திடீரென சாலையில் அமர்ந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டவர் போலீசாரை ஒருமையில் கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் அவர்மீது 5 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.