கும்மிடிப்பூண்டியில் அரசு டாக்டரை தாக்கிய 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கடந்த 6-ந்தேதி இரவு சாமிரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் விஷம் குடித்து விட்டதாக சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் கென்னடி சிகிச்சை அளித்தார். உடல் நலம் தேறிய கார்த்திக் உள் நோயாளிகள் வார்டுக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.
அப்போது கார்த்திக்கை பார்க்க வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சத்தம் போட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனை டாக்டர் கென்னடி கண்டித்தார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த கும்பல் டாக்டர் கென்னடியை சரமாரியாக தாக்கினர். மேலும் ஆஸ்பத்திரியில் இருந்த பொருட்கள் மற்றும் உபகரணங்களை நொறுக்கி சூறையாடி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தாக்குதலில் காயம் அடைந்த டாக்டர் கென்னடி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் சந்திரசேகரன் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அரசு டாக்டரை தாக்கியது தொடர்பாக சாமிரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி, கோட்டக்கரையை சேர்ந்த திலீப்குமார், மற்றும் எளாவூர் அடுத்த துராபள்ளம் கிராமத்தை சேர்ந்த தங்கபிரகாஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.