செய்திகள்
தேயிலைத்தூள்

குன்னூர் தேயிலை ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி

Published On 2021-06-28 12:09 GMT   |   Update On 2021-06-28 12:09 GMT
குன்னூர் தேயிலை ஏல மையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கிறார்கள்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலைத்தூள் குன்னூரில் உள்ள தேயிலை ஏல மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் சார்பில் நடத்தப்படும். இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கிறார்கள். விற்பனை எண் 25-க்கான ஏலம் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

ஏலத்திற்கு மொத்தம் 26 லட்சத்து 92 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 19 லட்சத்து 87 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 7 லட்சத்து 4 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 88 சதவித தேயிலைத்தூள் விற்பனையானது. அதாவது 23 லட்சத்து 37 ஆயிரம் கிலோ விற்பனையான தேயிலைத்தூளின் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.22 கோடியே 32 லட்சம் ஆகும்.

இதில், சி.டி.சி. தேயிலைத்தூளின் உயர்ந்தபட்ச விலை கிலோ ஒன்று ரூ..305-க்கும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் உயர்ந்தபட்ச விலை கிலோ ஒன்று ரூ.280-க்கும் ஏலம் போனது. விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.3 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்று ரூ.80-ல் இருந்து ரூ.82 வரையும், விலை உயர்ந்த தேயிலைத்தூள் கிலோ ஒன்று ரூ.150-ல் இருந்து ரூ.189 வரையும் ஏலம் சென்றது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்று ரூ.80-ல் இருந்து ரூ.87 வரையும், விலை உயர்ந்த தேயிலைத்தூள் கிலோ ஒன்று ரூ.161-ல் இருந்து ரூ.206 வரையும் ஏலம் சென்றது.

விற்பனை எண்.26-க்கான ஏலம் வருகிற 1, 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 23 லட்சத்து 37 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வருகிறது. கடந்த 5 வாரமாக தேயிலைத்தூளின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News