ஆன்மிகம்
திருவானைக்காவல் கோவிலில் தெப்ப உற்சவ கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தை தெப்ப திருவிழா தொடங்கியது

Published On 2021-01-18 05:05 GMT   |   Update On 2021-01-18 05:05 GMT
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் தை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 மாதங்களுக்கு பிறகு சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பஞ்சபூத தலங்களில்நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் தை தெப்ப திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு தை தெப்ப திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். அப்போது கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் 4-ம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு பிறகு நேற்று தான் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவர். தை தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 27-ந் ந்தேதி நடைபெறுகிறது.

அன்று மாலை 7 மணியளவில் திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News