செய்திகள்
ராகுல் காந்தி மற்றும் நரேந்திரமோடி

ராஜஸ்தான் அரசியல்: ’ஜனநாயக விரோத பாஜகவின் முகத்தில் விழுந்த நேரடி அடி’ - காங்கிரஸ்

Published On 2020-08-10 17:31 GMT   |   Update On 2020-08-10 17:31 GMT
ராஜஸ்தான அரசியலில் குழப்பம் முடிவுக்கு வர உள்ள நிலையில் இது ஜனநாயக விரோத பாஜகவின் முகத்தில் விழுந்த நேரடி அடி என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ராஜஸ்தானில் முதல்மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் நிலவி வந்தது. சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநில துணை முதல்மந்திரி பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். இதனால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தனக்கு பெரும்பான்மை உள்ளதாகவும், அதை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்ட அனுமதிக்கும்படி ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம் முதல்மந்திரி கெலாட் பல முறை கோரிக்கை விடுத்தார்.

ஆனால் முதல்மந்திரியின் கோரிக்கையை நிராகரித்துவந்த ஆளுநர் இறுதியாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட அனுமதியளித்துள்ளார்.

இதையடுத்து, தனது பெரும்பான்மையை நிரூபிக்க கெலாட் முயற்சி மேற்கொண்டு வந்தார்.



ஆனால், திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அதிருப்தி எம்.எல்.ஏ. சச்சின் பைலட் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் ராஜஸ்தான் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் உறுதியளித்தார். இதனால் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த ராஜஸ்தான அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சச்சின் பைலட்டும் (ராகுல்காந்தியுடனான பேச்சுவார்த்தைக்கு பின்) மகிழ்ச்சியடைந்துள்ளார். எங்கள் முதல்மந்திரியும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இது ஜனநாயக விரோத பாஜகவின் முகத்தில் விழுந்த நேரடி அடி. 

குதிரை பேரத்தில் ஈடுபடுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நாசமாக்குவதும் அவர்கள்(பாஜக) தான். பாஜக செய்துவரும் தவறான செயல்களுக்கு இது ஒரு செய்தியாகும்.

என அவர் தெரிவித்தார்.  
Tags:    

Similar News