செய்திகள்
திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி இறைச்சி கடை உரிமையாளர் பலி
திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி இறைச்சி கடை உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் காவலர் குடியிருப்பு பின்புறம் பகுதியை சேர்ந்தவர் காதர் பாஷா மகன் அப்பாஸ் (வயது 30). இவர் கிடங்கல் -1 பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் இறைச்சி கடை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை 6 மணிக்கு அப்பாஸ் தனது கடையை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடையில் இருந்த எந்திரத்தை அவர் இயக்கியதாக தெரிகிறது. இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அப்பாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.