செய்திகள்
மரணம்

விக்கிரவாண்டி அருகே வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் மரணம்

Published On 2021-11-22 13:18 GMT   |   Update On 2021-11-22 13:18 GMT
விக்கிரவாண்டி அருகே வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள வா.பகண்டை பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் ஜீவித் (வயது 4). நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஜீவித் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுபற்றி விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி தாசில்தார் இளவரசன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் தலைமையிலான மீட்பு குழுவினர் மற்றும் அக்கிராம இளைஞர்கள் வ.பகண்டையில் உள்ள நீர்நிலைகளில் இறங்கி சிறுவனை தேடினர்.

அப்போது வாதானூரான் வாய்க்காலில் பிணமாக கிடந்த சிறுவனின் உடலை மீட்டனர். ஜீவித் விளையாடியபோது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே செல்வமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News