செய்திகள்
லாரிகள்

தமிழகத்தில் 26ந் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தம்- சம்மேளன தலைவர் பேட்டி

Published On 2020-12-23 09:31 GMT   |   Update On 2020-12-23 09:31 GMT
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் வருகிற 26-ந் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று சேலத்தில் சம்மேளன தலைவர் ராஜவடிவேல் தெரிவித்தார்.
சேலம்:

வேக கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ். கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களில் வாங்க வேண்டும் என்பதை ரத்து செய்ய வேண்டும், காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் வருகிற 27-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் ராஜவடிவேல் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிற 26-ந் தேதி முதல் தமிழகத்தில் முழு லோடுகள், சில்லறை லோடுகள் புக்கிங் செய்வதை நிறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட புக்கிங் ஏஜெண்டுகள் எந்த லோடுக்கும் புக்கிங் செய்ய மாட்டார்கள். இதனால் ஜவுளி, இரும்பு, சிமெண்டு, தானிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தேக்கமடையும். தினமும் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைய வாய்ப்புகள் உள்ளன.

டீசல் மீதான விலையை 3 மாதத்துக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது டீசல் விலை உயர்வால் லாரி வாடகையை நிர்ணயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அருள்தாஸ், மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News