செய்திகள்

தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பேராசிரியர் பலி

Published On 2018-09-11 10:49 GMT   |   Update On 2018-09-11 10:49 GMT
தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சென்னியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் வீரபாண்டியன் (வயது 23).

இவர் புதுவை தவளக்குப்பம்- அபிஷேகப்பாக்கம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர் வேலை பார்த்து வந்தார். பணிக்கு செல்ல வசதியாக அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து வந்தார்.

சம்பவத்தன்று இவர், தவளக்குப்பத்தில் உள்ள ஏ.டி.எம். சென்டரில் பணம் எடுக்க வந்தார். அப்போது புதுவை- கடலூர் சாலையை கடந்து செல்ல முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வீரபாண்டியன் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வீர பாண்டியனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு வீரபாண்டியன் பரிதாபமாக இறந்து போனார்.

புதுவை நோணாங்குப்பம் புதுநகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 70). சம்பவத்தன்று இவர் சைக்கிளில் வீட்டுக்கு செல்ல புதுவை- கடலூர் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராமலிங்கம் படுகாயம் அடைந்தார். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராமலிங்கம் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார்.

இந்த 2 விபத்துகள் குறித்தும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம், ஏட்டு புவனேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News