ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் கோவில் வெளி பிரகாரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

Published On 2020-12-24 06:10 GMT   |   Update On 2020-12-24 06:10 GMT
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை(வெள்ளிக்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் :

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.

பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல் பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின் போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

சிறப்பு மிக்க வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் நாலாயிர திவ்வியபிரபந்தம் ஆனது பகல்பத்து மற்றும் ராப்பத்து என 20 நாட்கள் அபிநயம் மற்றும் இசையுடன் நம்பெருமாள் முன் பாடப்படும். அதற்காக ரெங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிர திவ்விய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.

ஸ்ரீரங்கம் கோவிலில் நாலாயிரம் திவ்வியபிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற திவ்விய தேசங்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருள்கின்றனர் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலில் படிக்கும் திவ்வியபிரபந்தத்தை வேறு எங்கும் படிக்கமாட்டார்கள். அப்படி படித்தால் அதற்கு பலன் இருக்காது என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 14-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் போது, தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்சுன மண்டபத்தில் எழுந்தருளுவார்.

இதே போல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான இன்று(வியாழக்கிழமை) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இதற்காக நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு பகல் பத்து அர்ச்சுன மண்டபம் வந்தடைகிறார்.

நாளை(வெள்ளிக்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். நாளை அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.

இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல்26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும். 31-ந் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும். 1-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 25-ந் தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

அதன்பின்னர் ராப்பத்து ஏழாம் திருநாளான 31-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 3-ந்தேதி தீர்த்தவாரியும், 4-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 5 போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

முன்னதாக நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி கமிஷனர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு அனுமதியில்லை

பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக இன்று(வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. நம்பெருமாள் பரமபத வாசல் கடந்து, திருமாமணி மண்டபம் எழுந்தருளிய பிறகு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு 8 மணிக்கு மேல் சேவை கிடையாது.

வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில்(ஜனவரி 4-ந்தேதி வரை) மூலவர் முத்தங்கி சேவை, பரமபதவாசல் திறப்பு ஆகியவற்றிக்கு பக்தர்கள் https://srirangam.org என்ற கோவில் இணையதளத்தில் கட்டணமில்லா தரிசனம் மற்றும் விரைவு வழி தரிசனம் (ரூ.250) ஆகியவற்றிற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த நேரத்தில் இருந்து 30 நிமிட நேரத்திற்கு முன்பாக கோவிலுக்கு வரவேண்டும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.
Tags:    

Similar News