லைஃப்ஸ்டைல்
உயர் இரத்த அழுத்தம் இ

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா? அப்ப இதை படிங்க

Published On 2020-05-21 09:28 GMT   |   Update On 2020-05-21 09:28 GMT
உயர் இரத்த அழுத்த நோய் இதற்கு முன்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், இன்று இளம் வயதினரும் கூட இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
உலக சுகாதார நிறுவனம், ‘கார்டியோவாஸ்குலர் என்ற இதய நோய் இறப்பு விகிதம் அதிகரிக்க முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம்’ என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. உலக அளவில் செயல்பட்டு வரும் 85 தேசிய உயர் இரத்த அழுத்த சங்கங்களின், தலைமை அமைப்பான ‘தி வேர்ல்டு ஹைபர்டென்ஷன் லீக்’ (டபிள்யூ.எச்.எல்), ‘உலகம் முழுவதிலும் உயர் இரத்த அழுத்த பாதிப்பு கொண்ட மக்களில் 50, சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அவர்களது ஆரோக்கிய நிலை குறித்து அறியாமல் இருக்கிறார்கள்’ என்ற தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக உயர் இரத்த அழுத்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதோடு, ஆரோக்கியமான உடல் நலத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கை முறையையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயர் இரத்த அழுத்தம் வரக்கூடும். இந்நோய் இதற்கு முன்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், இன்று இளம் வயதினரும் கூட இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

இரத்த அழுத்தம் என்பது ‘உயர் இரத்த அழுத்தம்’, ‘குறைந்த இரத்த அழுத்தம்’ என இரண்டு வகையாக உள்ளது. பொதுவாக, 30 வயதுள்ள ஒரு நபருக்கு 120, 80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம் ஆகும். இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் சுருங்கி இரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுவது. இது ‘சுருங்கு அழுத்தம்’ ஆகும். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் தன்னிடம் இருந்து இரத்தத்தை வெளியேற்றி, விரிந்த நிலையில் உடலில் இருந்து திரும்ப வரும் இரத்தத்தை பெறுவது. இது ‘விரிவு அழுத்தம்’ ஆகும். அதன் அடிப்படையில், கீழ்க்கண்ட மூன்று பிரிவுகளாக உயர் இரத்த அழுத்தம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் நிலை சிஸ்டாலிக் 140 - 159, டயஸ்டாலிக் 90 - 99. இரண்டாம் நிலை சிஸ்டாலிக் 160 - 179, டயஸ்டாலிக் 100 - 109. நெருக்கடி நிறைந்த மூன்றாம் நிலை சிஸ்டாலிக் 180 -க்கு மேல், டயஸ்டாலிக் 110-க்கு மேல்.

35 முதல் 45 வயதினை ஒருவர் கடந்து செல்லும்போது, அவரது உடலில் உள்ள சிறிய சுத்த இரத்த குழாய்கள் விரியும் தன்மையை இழக்கின்றன. தவறான உணவுப்பழக்கம் காரணமாக இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பால், தடிப்பு ஏற்பட்டு அதன் உள் அளவு சுருங்கி விடுகிறது. அதனால், இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து, அழுத்தம் அதிகமாகும் நிலைதான் உயர் இரத்த அழுத்தம். இதை நோய் என்று சொல்ல இயலாது. ஆனால், உடலை பாதிக்கும் வெவ்வேறு நோய்களுக்கான அடிப்படை காரணமாக இது அமைந்து விடுகிறது. இது அறிகுறிகளை காட்டாமல் தாக்குவதால் ‘சைலண்ட் கில்லர்’ என்றும் சொல்லப்படுகிறது.
Tags:    

Similar News