தேங்காய்திட்டில் பொதுப்பணித்துறை ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் திருத்தகுமார்பன் (வது 61). பொதுப்பணித்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
இவருக்கு ராதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. திருத்தகுமார்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வந்த போது, தவறி விழுந்ததில் இவருக்கு கை முறிவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மதியம் வீட்டுக்கு மது வாங்கி வந்து குடித்தார். இதனால் அவரை மனைவி ராதா கண்டித்தார். ஆனால், மனைவியை திட்டிவிட்டு திருத்தகுமார்பன் மாடிக்கு சென்றார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சமையல் செய்து விட்டு ராதா மாடிக்கு சென்று பார்த்த போது மாடி படிக்கட்டில் உள்ள இரும்பு கம்பியில் நைலான் கயிற்றால் கணவர் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அலறினார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திருத்தகுமார்பன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் தேவநாத் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.