செய்திகள்
கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு
கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கும்பாபிஷேக விழாவிற்கு வந்த 8 பெண்களிடம் மர்ம கும்பல் நகையை பறித்துச் சென்று விட்டது. இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்பாபிஷேக விழாவின்போது கஸ்தூரிபாய் என்ற பெண்ணிடம் 8 பவுன், சிவஞானத்திடம் 3 பவுன், பஞ்சவர்ணத்திடம் 2 பவுன், ராமுத்தாயிடம் ஒரு பவுன், மற்றொரு பஞ்சவர்ணத்திடம் 3 பவுன், அமராவதியிடம் 3 பவுன், செல்லம்மாளிடம் ஒரு பவுன், சரஸ்வதியிடம் 3 பவுன் ஆகிய 8 பெண்களிடம் இருந்து சுமார் 24 பவுன் நகைகளை ஆசாமிகள் பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் தனிப்படை அமைத்து பெண்களிடம் நகையை பறித்து சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.