ஆன்மிகம்
ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது

Published On 2019-10-30 08:27 GMT   |   Update On 2019-10-30 08:27 GMT
தீபாவளியையொட்டி ஆண்டுக்கு 13 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது.
ஹாசன் டவுனில் அமைந்துள்ளது ஹாசனாம்பா கோவில். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி 13 நாட்கள் மட்டும் திறக்கப்படும் இக்கோவிலில் ஹாசனாம்பா தேவி மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் கோவில் நடை சாத்தப்படும். அப்போது அங்கு தீபவிளக்கு ஏற்றப்படும். மேலும் கருவறையில் பூக்கள், பூஜை பொருட்கள், பழங்கள் ஆகியவை வைக்கப்படும். அவைகள் அடுத்த ஆண்டு தீபாவளியையொட்டி கோவில் நடை திறக்கப்படும் வரை எந்தவித பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது தீபவிளக்கு அணையாமலும், பூக்கள் வாடாமலும், பழங்கள் கெட்டுப்போகாமலும் அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுதான் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 13 நாட்கள் ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 17-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன.

2-வது நாளான 18-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். அன்று முதல் கர்நாடகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஹாசனாம்பாவை தரிசித்து சென்றனர்.

மேலும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., மந்திரி மாதுசாமி, கர்நாடக தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், நடிகை தாரா, பிரபல திரைப்பட இயக்குனர் ராக்லைன் வெங்கடேஷ், சாலுமரத திம்மக்கா உள்பட முக்கிய பிரபலங்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அன்று கோவிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நேற்று முன்தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்தனர். இந்த நிலையில் முன்கூட்டியே குறிப்பிடப்படி 29-ந் தேதியான நேற்று கோவிலின் நடை மூடப்பட்டது. அதையொட்டி நேற்று காலை 6 மணி வரை பக்தர்கள் ஹாசனாம்பா தேவியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

காலை 6 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பூஜைகள் அனைத்தும் முடிந்து சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டு, அம்மனுக்கு படையல், பூக்கள், பழங்கள் அனைத்தும் வைக்கப்பட்டு மதியம் சரியாக 1.20 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது.

மந்திரி மாதுசாமி, மாவட்ட கலெக்டர் கிரீஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம் நிவாஸ், கோவில் தலைமை நிர்வாக அதிகாரி நாகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் முன்பு கோவில் நடையை அர்ச்சகர்கள் பூஜை செய்து மூடினர். பின்னர் அதிகாரிகள் கோவில் நடைக்கு பூட்டுப்போட்டு சீல் வைத்தனர். அதன்பின்னர் கோவில் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

பின்னர் நிருபர்களிடம் பேசிய மந்திரி மாதுசாமி, “ஹாசனாம்பா அம்மன் தரிசனம் சிறப்பாக நடந்து முடிந்தது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அம்மன் அருளால் இந்த ஆண்டு மழை நன்றாக பெய்தது. இனிவரும் காலங்களிலும் இதேபோல் இருக்க வேண்டும்“ என்று கூறினார். மேலும் நாளை(அதாவது இன்று) கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப் படும் என்றும் தெரிவித்தார்.
Tags:    

Similar News