செய்திகள்
வேதாரண்யம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி
வேதாரண்யம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நயனார் குத்தகை பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் சுரேஷ் (வயது38). விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் நெய்விளக்கு கடைத்தெருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் அண்டர்காட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் உள்ள பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகலட்சுமி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.