செய்திகள்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கை அபு தாபியில் நடத்த அனுமதி அளித்தது ஐக்கிய அரபு அமீரகம்
பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இந்த வருடம் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் பாதுகாப்பான முறையில் போட்டிகள் நடைபெற்றன. என்றாலும் சில வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் போட்டி உடனடியாக ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஜூன் மாதம் போட்டியை அபு தாபியில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விரும்பியது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் அனுமதியை நாடியது. இந்த நிலையில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் போட்டியை நடத்துவதற்கு கொரோனா தொடர்பான நடைமுறையில் உள்ள சிலவற்றிற்கு விலக்கு அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து போட்டியை நடத்த பாகிஸ்தான் ஆயத்தமாகி வருகிறது. இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகம் வரும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.