உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் குறைந்து வரும் பாதிப்பு- புதிதாக 29,976 பேருக்கு கொரோனா

Published On 2022-01-26 14:35 GMT   |   Update On 2022-01-26 14:35 GMT
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் 27,507 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 2.13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 24 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது.  பாதிப்பு விகிதம் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 5,973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 3740 பேருக்கும், செங்கல்பட்டில் 1883 பேருக்கும், திருப்பூரில் 1787 பேருக்கும், சேலத்தில் 1457 பேருக்கும், ஈரோட்டில் 1302 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 27,507 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 73 ஆயிரத்து 185 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,359 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,13,692 ஆக உயர்ந்துள்ளது.  
Tags:    

Similar News