ஆட்டோமொபைல்

உலகின் முன்னணி நிறுவனமாக உருவெடுத்த ஃபோக்ஸ்வேகன்

Published On 2019-02-02 10:17 GMT   |   Update On 2019-02-02 10:17 GMT
2018 ஆம் ஆண்டு உலகின் முன்னணி கார் நிறுவனமாக ஃபோக்ஸ்வேகன் உருவெடுத்திருக்கிறது. இந்நிறுவனம் உலகம் முழுக்க சுமார் ஒரு கோடி வாகனங்களை விற்பனை செய்துள்ளது. #Volkswagen



ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 2018 ஆம் ஆண்டின் முன்னணி கார் நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமம் சார்பில் ஃபோக்ஸ்வேகன் நுகர்வோர் வாகனங்கள், வணிகம், போர்ஷ், லம்போர்கினி, பென்ட்லி, ஆடி, ஸ்கோடா, மேன் மற்றும் ஸ்கேனியா உள்ளிட்ட பிராண்டுகளை கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு மட்டும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உலகம் முழுக்க சுமார் 1.083 கோடி வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இது 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 0.98 சதவிகிதம் அதிகம் ஆகும். 2018 ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தைத் தொடர்ந்து ரெனால்ட்-நிசான்-மிட்சுபிஷி குழுமம் சர்வதேச அளவில் 1.076 கோடி வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இது 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.4 சதவிகிதம் அதிகம் ஆகும்.



இரு நிறுவனங்களை தொடர்ந்து டொயோட்டா குழுமம் உலகம் முழுக்க சுமார் 1.059 கோடி வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இந்நிறுவனம் 2017 ஆம் ஆண்டு 1.038 கோடி வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அந்தவகையில் கடந்த ஆண்டு டொயோட்டா குழுமம் விற்பனையில் மட்டும் 2 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நான்காவது இடம்பிடித்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் குழுமம் செவர்லே, புயிக், ஜி.எம்.சி., கேடிலாக், ஹோல்டென் போன்ற பிராண்டுகளை கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு சுமார் 80 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. 

சர்வதேச சந்தையில் ஹூன்டாய் நிறுவனம் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுக்க சுமார் 74 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. விரைவில் கியா மோட்டார்ஸ் இந்தியாவில் தனது வியாபாரத்தை துவங்க திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News